தமிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.
| பள்ளி முகப்பு |
மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு. அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி. கல்வி வியாபாரப் போட்டியில் தமிழகத்தின் கல்வி வியாபாரத்தில் நோஞ்சானாய்ப் போட்டியிடும் ஒரு நோஞ்சான் குழந்தையின் அடையாளாமாய் வெளிப்புறத்தில் தெரிகிறது அந்த அரசு ஆரம்பப் பள்ளி.
| தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி, ஆசிரியர் திரு. ப்ராங்ளின் |
பள்ளி முகப்பை அடையும் போது, பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்ளினும் நம்மை அன்போடு வரவேற்கிறார்கள். முதல் சந்திப்பெனினும், பார்வைகளிலேயே அன்பு வழிந்தோடுகிறது. கடும் போட்டியில் வென்ற நகரத்துச் சாயம் படியாத ஒரு வெள்ளந்தியைப் பாராட்டும்போது கசியும் வெட்கம் போல், அவர்களிருவரும் நம்மைப் பார்க்கும்போது அவர்களிடமிருந்து வழிந்தோடுவதைப் பார்க்க முடிந்தது.
| வகுப்பறை |
மனதில் பொங்கும் பெருமையோடு அந்த வகுப்பறைக்குள் அழைக்க உள்ளே நுழைந்த போது, அந்த அற்புதச் சூழலை விவரிக்க வார்த்தைகள் போதாது. அந்த வகுப்பறையின் தரமும் வடிவமைப்பும் மூச்சடைக்க வைத்தது.
| எழுதுபலகை, குடிநீர், முதலுதவிப்பெட்டி |
- பளபளக்கும் தரை,
- தரமான பச்சை வண்ணப்பலகை,
- வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய்,
- அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,
- வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,
- தெர்மோகூல் கூரை,
- மின்விசிறிகள்,
- உயர்தர நவீன விளக்குகள்,
- கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்,
- மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை,
- வேதியியல் உபகரணங்கள்,
- கணித ஆய்வக உபகரணங்கள்,
- முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,
- மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்,
- அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
- மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
- அனைவருக்கும் தரமான சீருடை,
- காலுறைகளுடன் கூடிய காலணி,
- முதலுதவிப்பெட்டி,
- தீயணைப்புக்கருவி,
- உயர்திறன் வாய்ந்த கனிணி,
- காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
..... என எல்லாமே தரமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு சேகரித்த பொக்கிஷமாய் அந்தக் கிராமத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த தயாராக இருக்கிறது.
| கணினி உட்பட கல்வி உபகரணங்கள் |
இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில், சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே.
| மேசை, பெட்டியுடன் கூடிய நாற்காலி |
தான் செய்யும் பணியை ஒரு வழக்கமான பணி என நகர்த்தாமல், அதை உயிராய் நேசித்ததன் விளைவுதான் இது. பாரதியின் அக்னிக்குஞ்சு போல், அவருக்குள் இருந்த மாற்றம் எனும் நெருப்புக்கங்குதான், இன்றைக்கு தமிழகத்தின் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் வண்ணம், ஒரு சாயம் வெளுத்துப்போன உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளியை உலகத்தரத்திற்கு மாற்றிக்காட்டியுள்ளது.
பில்லூர் அருகே மலைவாழ் மக்கள் பகுதியில் இருந்த ஓராசிரியர் பள்ளி ஆசிரியராக நியமிக்கப் பட்டபோதே, ஃப்ராங்ளின் மிகுந்த சிரத்தையெடுத்து வெறும் பதினேழு பிள்ளைகள் படித்த நிலையில் இருந்து 30 பிள்ளைகளாக உயர்த்தியிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஃப்ராங்கிளின், தனக்குள் இருந்த கனவுத்திட்டத்தை செயல்படுத்த துவங்கினார். ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன கட்டம் அது. ஆண்டாண்டு காலமாக இருந்த அந்த அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர் படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக அவசியத் தேவை மாற்றம் என்பதே.
காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர், தனக்கு மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டை தீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளார்.
| ஊர்மக்களுடன் ஆசிரியர்கள் |
மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதியும், ஆசிரியர் ஃப்ராங்களினும் ஒரு பெரிய தொகையை அளித்து அந்த வேள்வியை தொடங்கியுள்ளனர். வளரும் தலைமுறைக்காக தொடங்கிய வேள்வியில் அவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு, நோக்கம் ஆகியவற்றை உணர்ந்த, அவர்களின் செயல்பாட்டின் மேல் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட கிராமத்தினரின் ”கிராம கல்விக்குழு”வும் கை கோர்க்க நான்கே மாதத்தில் புதியதொரு உலகம் சமைக்கப்பட்டது.
இந்தக் கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு சொர்க்கம் காத்திருந்தது. இருக்கும் இரண்டு வகுப்பறையில் ஒன்றை ஒரு முன்மாதிரி வகுப்பறையாக வடித்தெடுத்துள்ளனர்.
தங்களின் பங்களிப்பு, இராமாம்பாளையம் கிராமக் கல்விக்குழுவினரின் உதவி என, சுமார் இரண்டரை லட்சம் செலவில் இதை நிறைவேற்றியுள்ளனர். எப்படி இப்படியொரு செயலைச் செய்ய தங்களால் ஒத்துழைப்பு அளிக்க முடிந்தது என கிராமத் தலைவரிடம் கேட்கும் போது அவர் சொல்லும் ஒரே வார்த்தை “திரு.பிராங்களின் மீது தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமே” என்பதுதான்.
| ஆசிரியர் திரு. ப்ராங்ளின் |
திரு.ஃப்ராங்களின் வெறுமென ஒரு சாதாரண ஆசிரியராக அந்தப் பள்ளியில் செயல்படவில்லை. குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கிறார். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் அவர்மேல் ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம். குழந்தைகள் குறித்து பெருமையாகச் சொல்லும் ஆசிரியர் “எங்கள் பிள்ளைகளுக்கு வெறும் கல்வியை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை. சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும்” தெரிவிக்கிறார்.
பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது. முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதைத் திறம்படத் துவங்கியுள்ளனர்.
மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை, அடையாள அட்டை, ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.
பிள்ளைகளின் சுய ஒழுக்கம் மற்றும் தெளிவு குறித்து கூறும்போது, புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் மூன்று மாதங்களாய் புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு செய்திடவில்லை. நடந்துவரும் போது சுவர்களைத் தொடர்ந்து தொட்டால் அழுக்காகிவிடும், அதைத் தவிர்க்க வேண்டும் என்பது உட்பட ஒவ்வொன்றிலும் பிள்ளைகள் ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதை அவ்வப்போது காண நேர்ந்தது. பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு, திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.
இந்த மறுமலர்ச்சி இத்தோடு நிற்காமல் எல்லாக் கிராமங்களிலும் பூக்க வேண்டும். அதற்கு நீரூற்ற இன்னும் எத்தனை காலம் அரசாங்கத்தையே எதிர்பார்ப்பது. ஏன் அந்த மாற்றத்தை நாமே விதைக்கக்கூடாது? கோவில் இல்லாதா ஊர்கள் உண்டா, அதிலும் குறிப்பாக அங்கிருக்கும் கோவில்கள் கோடிக்கணக்ககில், லட்சக்கணக்கில் செலவு செய்து புணரமைக்கப்படுவதற்காக எவ்வளவோ சிரமப்பட்டு எல்லாக் கிராமங்களும் நிதியீட்டிக்கொண்டுதானே இருக்கின்றன? அதில் ஏன் கொஞ்சம் தொகையை இந்த பள்ளிகளை நோக்கி மடைமாற்றக்கூடாது?
குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளியிலும் படித்து முன்னேறிய முன்னாள் மாணவர்களே கூட ஒன்று திரண்டு தங்களைச் செதுக்கிய பள்ளியை ஏன் ஒரு மாதிரிப்பள்ளியாக மாற்றிடமுடியாது? எல்லாமே சாத்தியம் தான், ஆனால் எங்கே மாற்றம் நிகழ வேண்டுமோ அங்கே ஒரு ஃப்ராங்ளின் உருவாக வேண்டும், அல்லது நானோ, நீங்களோ இதை எடுத்துச்சொல்லி ஒரு ஆசியருக்குள் ஒளிந்திருக்கும் ஃப்ராங்ளினை வெளிக்கொணரவேண்டும்! பள்ளியின் வலைப்பதிவு முகவரி
இதேபோல் ஒரு மாதிரிப் பள்ளியை அமைக்க அனைத்து திட்டங்களையும், தன் அனுபவத்தையும் தருவதற்கு திரு.ஃப்ராங்ளின் தயாராக இருக்கின்றார். நாம் தயாரா?
ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவதுதான் புரட்சியா? மாற்றத்திற்காக அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் புரட்சிதான்!
திரு. ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com 99424 72672
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com 99424 72672
-0-
பள்ளிக்குச் சென்றுவர துணை நின்ற எங்கள் ஈரோடு தமிழ்வலைப்பதிவர் குழும நண்பர்கள் கார்த்திக், ஆரூரன், லவ்டேல் மேடிக்கு நன்றி
.
60 கருத்துக்கள்:
ஃபிராங்ளினை தலை தாழ்த்தி வணங்குகிறோம் ஐயா.
இன்னும் பல நூறு ஃபிராங்கிளின்கள் உருவாக பிரார்த்திப்போம்
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்
அன்னயாவினும் புண்ணியம்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்..!
மகாகவி பாரதியின் நினைவு நாள் நெருங்குகிற தருணத்தில், அவரது கனவை நனவாக்குகிற ஒரு முயற்சியை அருமையாகப் பகிர்ந்தமைக்கு நன்றி கதிர்! அவசியம் இது போன்ற முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
என்ன சொல்றது...
அரசாங்கத்தின் அலட்சியமும், பொது மக்களின் ஆங்கில மோகமும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந் நாளில், எதிர் வரும் தலை முறையினர் குறித்து சிந்தித்து அதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர் பிராங்களினும், தலைமை ஆசிரியரின் செயல் பாராட்டுக்குரியது. இவர்களுக்கு நல்லாசிரியர் விருது கொடுக்க வலையுலகத்தினர் உறுதுணையாக இருப்பார்கள் என எண்ணுகிறேன்.
வழக்கம் போல சிந்தனையைத் தூண்டும் விதமாக பதிவிட்டதற்கு மிகவும் நன்றி, கதிர்!
அவருக்கும், அவருக்கான ஒத்துழைப்பு நல்கியவர்கள், ஒரு எட்டுப் போய்ப் பார்க்கலாம் என சென்று வந்த அன்பு உறவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!
S cool Sharing Kathir.
மிக நன்று.
< உண்மையிலேயே வணங்கத்தக்க ஆசிரியர். நாம் அனைவரும் ஒரு முறை பிக்னிக் சென்று அங்கு செயல் படுத்த பட்டிருக்கும் நடைமுறைகளை கற்று வர தூண்டுகிறது இந்த கட்டுரை. எழுதிய நல்ல மனங்களுக்கு நன்றி.....>
இவர்கள் நல்லாசிரியர்கள்!
தலைப்பில் சிறு எழுத்துப் பிழை உள்ளது. திருத்தினால் மகிழ்வேன். கல்வி வணிகத்திற்கெதிராக என இருத்தல் வேண்டும்.
கல்வி வியாபாரம் என்பது நல்ல செயல். கல்வி வணிகம் என்பது தீய செயலாகும்.
வியாபாரம் என்பது ஒரு காரியாகு பெயர். அதாவது, ஒரு பண்டத்தை எங்கும் கொண்டு சென்று நுகர்வோரைச் சென்றடையச் செய்வது. வியாபித்திருக்கச் செய்வது வியாபாரம்.
வணிகம் என்றால், விற்றுப் பணமாக்கும் செயலின் பெயர்ச் சொல்.
ஆகவே, ஒருவர் கல்வியை வியாபித்திருக்கச் செய்தல் நன்றாம். இயற்கையின் கொடைப்படி, நீர், காற்று மற்றும் கல்வியை வணிகம் செய்தல் அறமன்றாம்!!
மிகவும் நன்றி
அருமை!
ஃபிராங்ளினை தலை தாழ்த்தி வணங்குகிறோம்
நன்றி திரு கதிர் அவர்களே... உன்னதமான தகவலுக்கு...
வாழ்த்துக்களும் நன்றிகளும் திரு.பிராங்க்ளின் அவர்களே..... புனிதமான பணிக்கு...
Great!
பாராட்டப் பட வேண்டிய செயல். இவர் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வழி காட்டுகிறார்.
Arumaiyilum arumai. Asathuraarappa.
Nalla pathivu Kathir.
நல்லதொரு பகிர்வு.
வாழ்த்துகள் கதிர். நல்ல பகிர்வு. நண்பர் ஃபிராங்ளினுக்கும் வாழ்த்துகள்.
Can I share this post in my Facebook?
உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...
மிக அருமையான, உள்ளத்தை கொள்ளைக்கொள்ளும் விழிப்புணர்வு பகிர்வு சகோதரர்.
சகோதர் பிரான்க்லினை நினைத்து மனம் மிகவும் பெருமிதமடைகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மிக அற்புதமான பணி அவருடையது...
நன்றி..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
poonkothu! I'm inspired....just looking like a private public school!rather better than that!
A bouquet for Franklin sir too.
முழுமையான நிறைவான பகிர்வு... ஆசிரியர் ஃபிராங்க்ளின் அவர்களின் உழைப்பு மலைக்க வைக்கிறது.. ஒத்துழைத்த அனைத்து நல்உள்ளங்களும் நீடூழி வாழவேண்டும்.. வாழ்த்துவோம்..
Thaangalin pani sirakka vaaltthukkal
வாசிக்கும் போது இது கனவா நிஜமா என்று கிள்ளி பார்க்க தோன்றுகிறது. இந்த முயற்சி தமிழகம் எங்கும் பரவ வாழ்த்துக்கள்.
அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
பிராங்ளினின் சமூக சிந்தனை விளைவித்த முயற்சியின் எழுச்சியை பாராட்டுகிறோம். அல்ஹம்துலில்லாஹ்!
பிராங்ளினை கெளரவித்த உங்களது பதிவுக்கும் நன்றிகள்.
ஆசிரிய பெருந்தகை ஃபிராங்ளின் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஓர் சிறந்த முன்னோடி.
அவரின் பணி மென்மேலும் விரிவடைய வாழ்த்துகிறேன்!
பகிர்வுக்கு நன்றி!
எமது தளத்தில் பதிவிட அனுமதிக்க வேண்டுகிறேன்.
எங்கள் கொங்குத் தமிழ் மண்ணில், அதுவும் ஒரு கிராமத்தில், இப்படி ஒரு பள்ளியா?
ஆச்சரியம், பெருமிதம், ஏக்கம் – அனைத்தும் நிறைந்த ஓர் உணர்வு..!
U.S-லிருந்து
ஞா. பேகன்
Erode Kathir - naaanum erode charthavane, intha oru puratchi pathiya ungalathu katturai migavum nanraagavum athey samayam sinthika veitha oru katurai - ithu pondru katurai paperil varume aaanal tamil nadu selikkum, ennal mudinthathai naaan ippali aasiriyarukku seyya iyalukiren !!
these type of news should come in mainstream media and other schools and teachers should learn from this.
District collectors and administrative officers should be given lessons about this school
ஓ போடுகிறேன்
நல்ல பகிர்வு,மிக்க நன்றிநண்பரே.
God be with your side ever Mr.Franklin. Hats off.
Thanks a lot for this excellent story about this innovative school. This shows how individuals can make a difference. I have shared your story in my face book account. Pl post if you know about any such schools.
A.Hari
http://inspireminds.in/
weldone franklin.
tamilnadu govt should suitable handle these kind of remarable guys , and to give full care taking of all govt schools to implement these facilities..
அற்புதமான விஷயம். சிரமம் எடுத்து சென்று விரிவாய் எழுதிய தங்களுக்கு பாராட்டுகள். லக்கி பதிவு மூலம் பார்த்து விட்டு ஆசிரியர்கள் இருவருக்கும் எஸ்.எம். எஸ் அனுப்பினேன். பிறிதொரு முறை போனில் பேச வேண்டும்
கோவில்லை தரிசிக்க வைத்தமைக்கு நன்றிங்கோ.
பள்ளியின் இணைய தள முகவரி தங்கள் ஐடியாதானே??
உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
Vaazhthukkal.Thangal pani melum sirakka menmelum vaazhthuhirom.
//ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவதுதான் புரட்சியா? மாற்றத்திற்காக அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் புரட்சிதான்!// இந்த இரு வரிகளையும் சற்று ஆழமாக சிந்தித்தால் நாமும் சாதிக்கலாம்..
you are the REAL HERO...Franklin...!!!
நண்பர் கதிர் அவர்களுக்கு நன்றி . அதே போல் ஆசிரியர் திரு பிராங்க்ளின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Megavum arumai. Matra arasu palli asiryarkaluku Franklin saar oru peru udharanamaka valikatiya velanginaal nanraga irukkum. He should be appointed as the school services director or adviser....
ஃபிராங்ளினை தலை தாழ்த்தி வணங்குகிறோம் ஐயா.
அன்பின் கதிர் - ஆசிரியர் ஃபிராங்கிளினை வாழ்த்தச் சொற்களே இல்லை. ஒரு கிராமப்புற அரசுப் பள்ளியில் இத்தனை சாதனைகளா ? தனி மனிதனாக நின்று - தலைமை ஆசிரியையுடன் இணைந்து - கிராம நிர்வாக்த்தினைக் ஊட்டுச் சேர்த்து - நல்ல செயல்கள் செய்ய இயலும் எனபதனி நிரூபித்திருக்கிறார். வாழ்க அவரது தொண்டுணர்ச்சி.
அங்கு கதிர் தலைமையில் சென்று தகவல்கள் சேகரித்து - இங்கு பகிர்ந்த
நண்பர்கள் ஆரூரன், கார்த்திக் , மாதேஷ் உட்பட அனைவருக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
திரு. ப்ராங்ளின், அவருக்கு உதவி செய்யும் தலைமை ஆசிரியை, மற்றும் கிராம மக்கள் பற்றி வெளி உலகுக்குத் தெரியச் செய்தமைக்காக உங்களுக்கு நன்றி.
எனக்கு 76 வயது. எங்கள் இளமைப் பருவத்தில், தனியார் பள்ளிகள் மிகக் குறைவு. எங்கள் தலைமுறையினரில் மிக உயர்ந்த பதவிகளைத் தங்கள் தகுதியினால் பெற்ற பெரும்பாலானவர்கள் அரசு கல்வி நிலையங்களில் பயின்றவர்கள்தான்.
எனவே அரசு பள்ளிகளின் தரத்தை மீண்டும் உயர்த்த திரு. ப்ராங்ளின் போன்றவர்களின் முயற்சிக்குச் சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.
Kudos to Mr Franklin and Madam Saraswathi. Both of them deserves for National Award. This information needs to be published in all news papers and magazines so as to reach everyone so as to motivate other teachers and public.
with best wishes
balki, Kovai-27
Best wishes to Mr.Franklin and Madam Saraswathi. Both of them deserve for National Award. This information needs to be published in all news papers and magazines so as to reach and motivate other teachers and public.
balki, kovai-27
Great Great Great
Hats off to Mr.Franklin...
Hats off to Mr.Franklin and his effort.
நேரில் பார்த்த வகையில் சொல்கிறேன்.. என்ன ஒரு அற்புதமான பள்ளி. கதிர் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்தப் பள்ளியைப் பற்றி நானும் கொஞ்சம் எழுதியுள்ளேன். நேரம் கிடைக்கையில் படியுங்கள்..http://saamakodangi.blogspot.com/2011/10/blog-post_29.html
நன்றி
சாமக்கோடங்கி
என்னத்தெ சொல்ல... இதற்கு அருகிலேயே சரஸ்வதி வித்யாலயா என்றொரு தனியார் பள்ளி இருக்கிறது. அங்கு கல்வி வியாபாரம் கொடிக்கட்டி பறக்கிறது.
ஓட்டைகளை இனி பார்க்க வேண்டாம்.. நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம்.. அந்த "சரஸ்வதி வித்யாலயா" வில் சரஸ்வதி இருக்க வாய்ப்பில்லை.. அவர் ராமாம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் பிசியாக இருப்பார்,....
Nothing is impossible in this world has been proved by our Franklin. May he achieve many more such milestones in his career.
thanks kadhir sir
ஃபிராங்ளினுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் !! தங்கள் மென்மேலும் சிறக்க பல பள்ளிகள் இது போல் மாற வாழ்த்துக்கள் !!
இன்னும் பிராங்க்ளின் போன்றோர் இருப்பதால் தான் மழை பெய்கிறது.....
நல்லதொரு தகவலைத்தந்த ஈரோடு கதிர் சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
Post a Comment